ஊடகம் என்பது தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பு சாதனமாகும்.
இவற்றுள் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும்
உள்ளடங்குகின்றன. இன்றைய உலகில் ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத
உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும்
உயிர்ப்பையும் நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு
சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ
அடையாளங்களைப் பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக்
கட்டமைக்கப்படும் பொய்களையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும்
எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப்
பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச்
சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான
போர், “ஊடகப் போர்” என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.
முஸ்லிம்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக
வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின்
இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும்
தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம்.
அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு
உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்)
அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்.
இத்தகைய இழி செயலில் மேற்கத்திய ஊடகங்களும் கீழக்கத்திய ஊடகங்களும் பெரும்
பங்கு வகிக்கின்றன.