இஸ்லாம்

இசுலாம் அல்லது இஸ்லாம் (இந்த ஒலிக்கோப்பு பற்றி الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும். இது கிறித்தவம், யூதம் போன்று ஓர் ஆபிரகாமிய சமயம் ஆகும். இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது. இசுலாமின் மூலமானதிருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இசுலாம் கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சமயமாகும்.

சொல்-வேர்

இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிறது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஏற்றுக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குர்ஆனில் பல பொருள்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சில செய்யுள்களில் (ஆயாத்துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”கடவுள் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர்களுடைய மனதை விசாலமாக்குகிறான்.”. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்க்கத்தையும் ஒன்றாக்குகின்றன,. “இன்று நான் உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கிவிட்டேன்; உங்கள் மீது என் ஆசியை பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தை மார்க்கமாக ஆக்கினேன்”. சொல்லளவில் மார்க்கத்தை வற்புறுத்துவதற்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்கு ஈடாக்குகின்றன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம் ஈமான் (நம்பிக்கை), இஹ்சான் (செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிறது . . அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் (இபாதாஹ்) மற்றும் இஸ்லாமிய நீதி (ஷரியா) இவற்றை காண்பிக்கிறது

இசுலாமிய நம்பிக்கை

இசுலாமின் நம்பிக்கையின்படி இந்தப் பிரபஞ்சத்திலுள்ளவைகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும். மேலும் அடிப்படையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளாவன;

இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்)

அரபு மொழியில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என கூறப்படும் "வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்" என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படைத் தகுதியாகும்..இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன் திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது.

மலக்குகள்.

மனிதனது புலனுறுப்புகளால் புரிந்து கொள்ள முடியாத, இறைவனது கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காக மட்டும் ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட சக்திகளை (திருகுர்ஆன் பிரயோகம்மலக்குகள்) நம்புவது.
மலக்குகள் இறைவனின் குழந்தைகள் அல்லர்.

காபிர்கள்   [இறை மறுப்பாளர்கள்]

ஒரே இறைவன் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களையும், உருவ வழிபாடு செய்வர்களையும், இறைவனுக்கு தாய், தந்தை, மகன், மகள் மனைவி என உறவு கற்பிப்பவர்களையும் காபிர்கள்   [இறை மறுப்பாளர்கள்] என அழைக்கின்றார்.

முன்னைய வேதங்கள்.

முகம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்டது உண்மையே என நம்புதல்.

முன்னைய இறைதூதர்கள்.

முன்னர் வாழ்ந்த இறைத்துதர்களை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை(திருக்குர்ஆன்: அல்-பாதிர்: 24)இவ்வாறு கூறப்பட்டவர்களில் 25 தூதர்களுடைய பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

இறப்பின் பின் வாழ்க்கை.

இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை (திருக்குர்ஆன் 16:38.).

விதி.

"கலாகத்ர்" என திருக்குர் ஆனில் கையாளப்பட்டுள்ள இச்சொல் தமிழில் "விதி" என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என இதற்கு விளக்கம் தரலாம். இவ்விதி குறித்து திருக்குர்ஆன் கூறும் போது "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)" என கூறுகிறது. இதன் விளக்கமானது காரணங்களிலாமல் காரியங்களில்லை என்பதாகும் ஆகும். உதாரணம் : ஒருவன் வீதியை கடக்க எத்தனிக்கிறான்; அந்நேரம் குறுக்கே ஒரு வாகனம் வருகிறது. அவன் சிந்தித்து நிதானித்து கடப்பானானால் அவனுக்கு காயம் ஏற்படாது என்பதே விதி. மாறாக, அவனது அறிவு குறைபாட்டினால் வாகனத்தின் முன் செல்வானானால் அவனுக்கு காயம் ஏற்படும் என்பதே விதி.

திருக்குர்ஆன் 

திருக்குர்ஆன் என்பது முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் ஆகும்.இதில் உள்ள அனைத்து வாக்கியங்களும், சொல்களும் இறைவனால் கூறப்பட்டவைகள் ஆகும்.இதை இறைவன், மலக்குகள் தலைவன் சிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக முகம்மது நபிக்கு அறிவித்தான். குரானே உலகின் உள்ள அனைத்து புனிதங்களுள் புனிதமானது ஆகும்.

கடமைகள்

கடமைகள் என பார்க்கும்பொழுது இஸ்லாம் பல கடமைகளை மக்களுக்கு கொடுத்துள்ளது. இவைகளின் மிக முக்கியமான ஐந்து கடமைகள் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என விளிக்கபடுகின்றன . மற்ற கடமைகள் பொதுவாக ஷரியத் சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

நம்பிக்கை (கலிமா)

சவூதி அரேபியா நாட்டு கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமின் அடிப்படை கலிமா
"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்.இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கபடுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே இசுலாமியன் ஆகிறான்.



பிரார்த்தனை (தொழுகை)

1865ம் ஆண்டு ஓவியம் - எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொழுகை புரியும் இசுலாமியர்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டமாக ஜும்மா தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை தொழுகையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு - Fasting

ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருந்தும், இரவில் கண் விழித்து இறைவனை துதித்த வண்ணமும் இருக்க வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகின்றது.

தானம் (ஜக்காத் - Jakkath)

ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை(௧௦௦ க்கு ௨.௫௫) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 85 கிராம் தங்கத்திற்கும் அல்லது 595 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.

புனித பயணம் (ஹஜ்)

புனித காபா
வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை உலகின் முதல் ஆலயமான சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாமானிய மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பயணம் செய்ய உடல் தெம்பும் பொருளாதாரமும் உள்ளவர்களுக்கே இது கடமை

மற்ற கடமைகள்

 இறைவனை நினைவுகூர்தல்
இசுலாம் தனது மக்களை, தமது வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூற வழியுருத்துகிறது.நம்மையும் அண்ட சராசரங்களையும்,மற்றும் அணைத்து உயிருள்ள,உயிரற்ற..அசையக்கூடிய,அசையாத படைப்புகளை படைத்து,உணவளித்து,பரிபாலனம் செய்து...வழி நடத்தும் வல்லமை வாய்ந்த இறைவனை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் சதாவும் நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையை..அதன் அச்சப்பாட்டை உள நிறுத்துவது!.. இது மக்களை பாவம் செய்வதில் இருந்து தடுப்பதாக இசுலாம் கூறுகின்றது. இதன்படி ஒவ்வொரு இசுலாமியரும் மற்ற இசுலாமியரை பார்க்கும்பொழுது அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என கூறவேண்டும். இவ்வாறே ஒருவர் சந்தோசமாக இருக்கும் பொழுது அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்றும் துக்கமாக இருக்கும்பொழுது இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் (நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம், மேலும் அவனிடமே திரும்பிசெல்பவர்களாக இருக்கிறோம்) என்றும் கூற வேண்டும். இவ்வாறு தும்மும்போதும், கொட்டாவி விடும் பொழுதும், பிறருக்கு உதவி செய்யும் பொழுதும், பிறருக்கு நன்றி சொல்லும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைக்க வேண்டும். மேலும் பொதுவாக எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என கூறி ஆரம்பிக்கவேண்டும்.

உணவு மற்றும் உடை

உணவுகளில் விலக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ஹராம் என வழங்கப்படுகின்றன. பன்றி இறைச்சி, குருதி, மாமிசந்தின்னிப் பறவைகளின் இறைச்சி, சாராயம் போன்றவை ஹராமான உணவுகள் ஆகும். பொதுவாக அனைத்து சைவ உணவுகளும், தாவர உண்ணிப் பறவைகளின் இறைச்சியும், மீன் வகைகளும் ஹலால் என அழைக்கப்படுகின்றன. இதற்கு 'அங்கீகரீக்கப்பட்டவை' எனப் பொருளாகும்.
உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.

வரலாறு

இசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முகம்மது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அராபியத் தீபகற்பம் முழுவதும் பரவியது. அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தன. இவை தவிர மற்றப் பகுதிகளிலும் இசுலாம் பரவத் தொடங்கியது. முகம்மது நபிக்குப் பிறகு வந்த ரசூத்தீன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், ஒட்டாமன் பேரரசு மற்றும் பல இசுலாமிய பேரரசுகளின் காரணமாக இசுலாம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. இந்த இடைப்பட்ட காலங்களில் இசுலாம் தனது புகழ் நுனியை அடைந்தது. இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி காரணமாக ஒட்டாமன் மற்றும் மொகலாய பேரரசுகள் வீழ்ச்சியடைந்தன. இது இசுலாமிய வளர்ச்சியில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. 21ம் நூற்றாண்டிலும் உலகின் அதி வேகமாக வளரும் சமயமாக இசுலாம் உள்ளது.

குடும்பமுறை

குடும்பங்களைப் பொருத்த மட்டில் கணவனே குடும்பத் தலைவன் ஆவான். குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவனது கடமை ஆகும். மனைவி அவனது உரிமையில் நிகரானவளாக இருக்கிறாள் என்பதுடன் கணவனது சொத்துக்களுக்கு அவளே பொறுப்பாவாள். ஒரு ஆண் அதிகப்பட்சம் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்யலாம். ஆனால் அதற்க்கு முன்பு அவன் நான்கு பெண்களையும் மனதளவிலும், பொருளாதார அளவிலும் சமமாக நடத்தும் பக்குவமும், வசதியும் பெற்றிருக்கவேண்டியது கடமையாகின்றது. ஆனால் பெண் ஒரு நேரத்தில் ஒரே கணவனுடன் வாழ மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் விதவை மறுமணமும் அங்கீகரீக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபி (ஸல்)  வரலாறு
முஹம்மது (ஸல்)  வரலாறு








 

No comments:

Post a Comment