Monday 7 October 2013

ஈமானின் அடிப்படைகள்

    ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்தாவது: நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
    இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.
    எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது நாம் இவ்வுலகில் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.
    ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.
    ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவைகளாவன:
    அல்லாஹ்வை நம்புவது.
    அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.
    அவனுடைய வேதங்களை நம்புவது.
    அவனுடைய தூதர்களை நம்புவது.
    மறுமையை நம்புவது.
    விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது.

1. இறை நம்பிக்கை:
    அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
    (அல்லாஹ் நித்திய ஜீவன்) - என்றென்றும் வாழ்பவன் - (2:225) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88). அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை.

2. வானவர்கள்:
    அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
    இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.

3. வேதங்கள்:
    அல்லாஹ் உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:
    நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (தௌராத்)
    நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (ஸபூர்)
    நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (இன்சீல்)
    நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட (அல்குர்ஆன்)
    ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். இதில் முந்திய எல்லா வேதங்களதும் சாராம்சம் அடங்கியுள்ளது. எனவே யாராவது அல்குர்ஆனைத் தனது வேதநூலாக ஏற்றுப் பின்பற்றினால் அவர் முந்தைய வேத நூல்களையும் ஏற்றவர் ஆகின்றார். இதன்படி முன்னய வேதங்கள் நம்பிக்கைக்குரியனவாகும் போது அல்குர்ஆன் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கும் உரியதாக அமைந்து விடுகின்றது. முழு உலகத்துக்கும் உரிய பொது வேத நூலாகத் திகழ்வது அல்குர்ஆனின் சிறப்பியல்பாகும்.

4. இறைத்தூதர்கள்:
    வேதங்களைத் தெளிவாக புரிந்து அவற்றுக்கேற்ப வாழ்ந்து ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்து முன்மாதிரியாக வாழும் மனிதப்புனிதர்களை அவர்களில் இருந்தே இறைவன் தோற்றுவித்தான். அவர்களையே இஸ்லாம் (இறைத்தூதர்கள்) என அறிமுகப்படுத்துகின்றது.
    அல்லாஹ் கூறுகின்றான்: 'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை' (அல்குர்ஆன் 35:24)
    இப்படித் தோன்றிய தூதர்களில் 25 பெயர்களையே அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

5. மறுமை நாள்:
    மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை.
    ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும்.
    பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.
    எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்.
    அல்லாஹ் ஒவ்வொருவருடைய நல்ல கெட்ட செயல்களையும் நிறுத்துப்பார்ப்பான். நன்மை தீமைகளுக்கேற்ப மன்னிப்பும் தண்டனையும் அளிப்பான்.
    யார் மன்னிப்புப் பெறுகிறார்களோ அவர்கள் சுவர்க்கம் புகுவர். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகின்றதோ அவர்கள் நரகம் செல்வர்.

6. இறை நிர்ணயம்:
    இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும்.
    மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.
    இது வரை ஒரு முஸ்லிம் நம்ப (ஈமான் கொள்ள) வேண்டிய ஆறு அம்சங்களை நாம் பார்த்தோம். இவற்றில் உறுதியான ஈமான் கொள்வது ஒவ்வொறு முஸ்லிமினதும் கடமையாகும்.

No comments:

Post a Comment