இறைக்கோட்பாடு


அறிமுகம்
ஸஹாதாவின் விளக்கம்
'அஷ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'. ஷஹாதத் என்று அழைக்கப்படும் இச்சொற்றொடர்கள் இஸ்லாத்தின் அடிப்படையும் ஆணிவேருமாகும். புதிதாக இஸ்லாத்தைத் தழுவுவோரும், இஸ்லாமியப் பெற்றோர்களுக்கு பிறந்த முஸ்லிம்களும் இந்த ஷஹாதத் எனும் இச்சாட்சியத்தை நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதிபூண்டு செயலால் நல்லறம் புரியும்படி கட்டளையிடப் பட்டுள்ளனர். அல்லாஹ்வைத்தவிர வேறு வணக்கத்திற்குறிய நாயன் இல்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாய் இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன் என்பதே ஷஹாதாவாகும். மிக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது ஷஹாதாவெனும் இச்சாட்சியம்.

அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்
வானம், பூமி மற்றும் அதிலுள்ள ஜீவராசிகளை சிருஷ்டித்த வல்லோன் அல்லாஹ்வுடன் அவனது படைப்பினமாகிய மனிதன் மனப்பூர்வமாய் செய்து கொண்ட உறுதிமொழி ஒப்பந்தமே ஷஹாதாவாகும். படைத்துக் காத்து பரிபாலித்து நாளை மறுiயில் நமக்கு நல்கவிருக்கும் நற்கூலியை நம்பிக்கை கொண்டு ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் என் வணக்க வழிபாடுகளை உறுதியாகச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வதும் அதன் பிரகாரம் தன் சொல்லால் உள்ளத்தால் நடத்தையால், நான் நடந்து காட்டுவேன் என்று கூறுவதும் இச்சாட்சியத்தில் அடங்கும்.

வானில் உள்ள கிரகங்கள். நட்சத்திரங்கள் பூமியில் உள்ள ஜீவராசிகள் மற்றுமுள்ள அனைத்துப் பொருட்களையும் பரிபக்குவமாகப் படைத்து அவற்றுக்கு இயக்கங்களை நிர்மானித்து அவற்றின் வாழ்வாதாரம் இவ்வுலகில் ஜீவித்திருக்கும், மரணக்கும் நாட்களை முறையே வரையரை செய்து நிர்வகிக்கும் சர்வசக்தி பெற்றவனே அல்லாஹ். மூலமின்றி படைத்துப் பரிபாலிக்கும் பூரண சக்தி அவனையன்றி வேறு எவர்க்கும் இல்லை. படைப்பது மட்டுமின்றி அதற்கு ஜீவ, மரணத்தை நிர்ணயிக்கும் முழு உரிமையும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே உரியது. அதுபோன்றே அவன் வழங்கும் வாழ்வாதாரமும் நாடியோர்க்கு தாராளமாகவும் நாடியோருக்குச் சுருக்கியும் வழங்குகிறான், மறைவான ஞானமும் அவனுக்கேயுரியது. ஆக படைப்பாளன் என்று நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் வல்லலோனின் இத்துணை அம்சங்களையும் சேர்த்து நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

படைத்துப் பரிபாலிப்பவன் என்று நம்பிக்கை கொண்ட விசுவாசி வணக்க வழிபாடுகளிலும் அனையன்றி வேறு எவருக்கும் வணக்க வழிபாடுகளை செலுத்தக் கூடாது. ''இபாதத்'' எனும் இவ்வணக்க வழிபாடுகளில் தொழுகை, பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல் போன்றவைகளோடு அல்லாஹ்வையன்றி அவனது படைப்பினங்களை வணங்குதல், அவைகள் தம்மை படைத்த இரட்சகனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என நம்புதல் தம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் இப்படைப்பினங்கள் தமக்கு வல்லோன் அல்லாஹ்விடம் கேட்டு வாங்கித் தரும் என நம்புதல் அல்லாஹ்வின் படைப்பினங்களாகிய சூரியன், சந்திரன், செடி, கொடி, மலக்குகள், நபிமார்கள், மனிதர்களில் சிறந்தவர்கள், நீர், நெருப்பு போன்றவைகளுக்கு அல்லாஹ்வுக்கு செலுத்தும் எந்த வணக்க வழிபாடுகளையும் உரித்தாக்குவது தடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமல்லாத பிற மதத்தினர் செலுத்தும் வணக்க வழிபாடுகளாகிய சிலை வணக்கம், சூரிய சந்திரனை வழிபாடு செய்தல், ஈஸா (அலை), உஜைர்(அலை) போன்ற இறைத்தூதர்களை இறைவனின் மகனாகச் சித்தரிப்பது வணக்க வழிபாடுகள் புரிவது நெருப்பினை வணங்குவது போன்ற வணக்க வழிபாடுகளிலிருந்தும் இஸ்லாம் வேறுபட்டு தனியாக நிற்கிறது. இதுபோன்ற வணக்கவழிபாடுகள் புரிந்த வௌ;வேறு சமுதாய மக்களை நேர்வழிப்படுத்த நிறைய இறைத்தூதர்கள் இப்பூவுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். இறைத்தூதர்களின் போதனையை ஏற்றோர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மீட்சியும் புறக்கணித்தோர் பூண்டோடு அழிக்கப்பட்டு மடிந்ததையும் அருள் மறையின் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் நமக்கு ஏவியவற்றைப் பின்பற்றி, தடுத்தவற்றிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டியதை அருள் மறை அழகு படக் கூறுவதைக் கேளுங்கள்.

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)
பெயர் மற்றும் தன்மைகளில் படைத்தோன் அல்லாஹ்வுக்குப் பல திரு நாமங்கள் உள்ளன. அவனின் அத்தன்மைகளை உருவகம் கொடுக்காமல் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்புவதும் ஷஹாதத்தின் அம்சமாகும். அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிடுகிறான்:

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.(20:5)

அவன் அர்ஷில் அமர்ந்திருப்பதை நம்பும் ஒரு விசுவாசி, அவன் இப்படி அமர்ந்தான், அப்படி அமர்ந்தான் என உருவகிக்காமல் உள்ளத்தால் நம்புவதே இதன் அம்சம்.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (42:11)

இவ்வாறு அல்லாஹ் தனது சர்வ வல்லமையைப் பிரகடனப் படுத்துகிறான். ஆகவே அல்லாஹ்வின் தன்மைகளை நம்பும் ஒரு விசுவாசி இவ்வசனத்தையும் சேர்த்து நம்பவேண்டும்.

முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றி குறிப்பிடுகையில்
(நபியே!) நீர் கூறும் ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(3:31)

நபி(ஸல்) அவர்களின் வாழ்வு குறித்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபித் தோழர்கள் வினவிய போது, அண்ணலாரின் வாழ்வு குர்ஆனாக இருந்தது என்ற செய்தியை ஹதீஸ்களில் காண்கிறோம். மேலும் அண்ணலாரின் வாழ்வில் நமக்கு அழகிய முன்மாதிரி உள்ளதை வல்ல அல்லாஹ் அருள்மறையில்

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)

ஆக அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் திருத்தூதரையும் நம்புவதில் இத்தனை அம்சங்களையும் இணைத்தே ஒரு விசுவாசி நம்பிக்கைக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஷஹாதாவின் விளக்கமாகும்.
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி
அடிப்படைகள் மூன்று: 1) ஈமான் 2) இஸ்லாம் 3) இஹ்ஸான்

1. ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான்.
2. இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல், முஸ்லிம் என்றால் கட்டுப்படுபவன்.
3. இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை (நேரில்)காண்பது போல் வணங்குவது.

ஈமானின் அடிப்படைகள் ஆறு
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்...(2:177)
(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்...(2:285)
1. அல்லாஹ்வை நம்புவது
2. வானவர்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது ...(உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - புகாரி)

இஸ்லாம் கூறும் உள்ளமும் உடலும்
அகீதா (கொள்கை (ஈமான்))
அமல் (செயல் (இஸ்லாம்))
அஹ்லாக் (ஒழுக்கம் (நற்குணம்))

ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு
ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.

ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.
முஃமினின் காரியம் ஆச்சரியமானது! அவனது காரியங்கள் அனைத்தும் அவனுக்கு நலவாகும். அது முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது வந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாகி விட்டது. அவனுக்கு துன்பமளிக்கக்கூடியது வந்தால் பொறுமைக் கொள்கிறான். அது அவனுக்கு நலவாகி விட்டது. - முஸ்லிம்: அபூயஹ்யா சுஹைப் பின் ஸினான்(ரலி).

செயல்கள் நிய்யத் என்னும் உறுதியான எண்ணங்களைப் பொறுத்தவையாகும். ஒவ்வொரு மனிதருக்கும் அவர் உறுதியாக எண்ணியது உள்ளது. எவர் ஹிஜ்ரதை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் செய்கிறாரோ அது அவ்வாறே ஆகிவிடுகிறது. எவராவது ஹிஜ்ரத் உலகிற்காகவோ, அல்லது மணமுடிக்க விரும்பும் பெண்ணிற்காகவோ செய்கிறாரோ அந்த ஹிஜ்ரத் அவர் எதற்காக செய்தாரோ அதற்காகவே இருக்கும். - புகாரி, முஸ்லிம்: உமர்(ரலி).

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலின் பக்கமோ தோற்றத்தின் பக்கமோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயத்தின் பக்கமும், செயல்களின் பக்கமும் பார்க்கிறான். புகாரி, முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி).

ஈமான் எழுபதுக்கும் மேற்ப்பட்ட கிளைகளால் ஆனது. அதில் மிகச் சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹூ என்ற திருக்கலிமாவாகும். அக்கிளைகளில் மிகக் குறைந்தது பாதையை விட்டும் துன்பம் தரும் பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும். புகாரி, முஸ்லிம்: அபுஹூரைரா(ரலி).

ஈமானின் சுவையைப் பெற்றவர்
மூன்று விஷயங்கள் யாரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.
1. மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் அவன் தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.
2. அவர் யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
3. இறைநிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை ஈடேற்றம் செய்த பின் மீண்டும் அந்த இறைநிராகரிப்பின் பக்கம் திரும்புவதை தம்மை நரக நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போல வெறுக்கவேண்டும். புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி)

முஃமின்களில் அழகிய குணமுடையவரே அவர்களில் ஈமானில் பரிபூரணமானவர் ஆவார். உங்களில் சிறந்தவர் உங்கள் பெண்களிடம் சிறந்தவரே ஆவார். திர்மிதி : அபூஹூரைரா(ரலி).
ஈமான் கூடும், குறையும்

நல்ல அமல்களைச் செய்யும் போது ஈமான் அதிகரிக்கும், நல்லவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டாலோ அல்லது தீயவற்றைச் செய்தாலோ ஈமான் குறையும்.

சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும் (உதாரணமாக திருட்டு, விபச்சாரம்).

ஒருவன் முஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் செய்ய மாட்டான். ஒருவன் திருடும் போது முஃமினாக இருக்கமாட்டான். திர்மிதி : அபூஹுரைரா(ரலி)

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)


ஈமானின் கிளைகள்

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)
ஈடிணையற்ற அருட்கொடை
மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அருட்கொடைதான் எத்தனை! எத்தனை! அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அதனை எண்ணிலடக்க முடியாது. (அல்குர்ஆன் 14:34)
ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல் பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஈமான் முழுமையடைவது எப்போது?
ஈமான் என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் சூழ்ந்து நிற்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயராகும். ஏகத்துவக் கொள்கை என்பது ஈமானின் நுழைவாயில். அதனுள் நுழைந்த பிறகு அதில் கடக்க வேண்டிய எத்தனையோ கட்டங்கள்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)
எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.
ஆனால் நமது சமுதாயத்தில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தனக்கு ஓர் இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக்கொண்டதோடு ஈமான் முழுமை அடைந்துவிட்டது என திருப்தியடைபவர் ஒருபுறம். நான் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஆனால் வரதட்சணை வாங்கிக் கொள்வேன், என்னுடைய தொழிலில் வட்டித் தொடர்பிருக்கும் என சில கடமைகளைப் பேணி, பல கடமைகளை புறக் கணிப்பவர் மற்றொருபுறம், ரமலான்மாதத்தில் மட்டும் பள்ளிவாயிலுடன் தொடர்பு வைத்து, அதற்குப் பிறகு பள்ளி செல்ல அடுத்த ரமலானை எதிர் பார்த்திருக்கும் கூட்டத்தினரோ உலகெங்கிலும் ஏராளம். இவ்வகையினர் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிமாக வாழ்வது மிக வருத்தத்திற்குரியது.
ஈமானின் பயன்கள்
முழுமையடைந்த ஈமானின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் பல உள்ளன. அவை அம்மனிதனோடு மட்டும் நின்றுவிடாது பிறரையும் சென்றடைகின்றன. அல்லாஹ் கூறுகிறான்:
(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)
ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தில் ஆழப்பதித்து, அதை வாழ்வின் அனைத்துத் துறையிலும் வெளிப்படுத்தும் மனிதன் காய்த்துக் குலுங்கும் பயனுள்ள மரத்தைப் போன்றவன் என அல்லாஹ் கூறும் உவமையைக் கவனித்தீர்களா!
அது மட்டுமல்ல! அம்மனிதர் மரணிக்கும் போது மலக்குகள் அவரிடம் உரையாடுவதைக் கேளுங்கள்!
நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்கள் மீது(அவர்களின் மரண வேளையில்)மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கச் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நாங்கள் உங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு. அதில் நீங்கள் தேடுபவை உங்களுக்குண்டு. மிகவும் மன்னிப்பவனான, கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக (அச்சுவனத்தைப்)பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,32)
இந்நிலையில் அவர் தன்வாழ்வின் இறுதி வார்த்தையாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடைதரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
குவளையிலிருந்து ஊற்றப்படும் தண்ணீர் போல் மிக எளிதாக அவரின் உயிரை எடுத்து சொர்க்கக் கம்பளத்தில் வைத்து மலக்குகள் எடுத்துச் செல்ல, இவரின் பிரிவால் நல்லோர்கள் கண்ணீர் வடித்து துக்கத்தில் ஆழ்கின்றனர். ஏன்!
அவரின் மரணத்திற்காக வானம், பூமி கூட அழுகிறது. (கருத்து, அல்குர்ஆன் 44:29)
ஏகத்துவக் கொள்கை மற்றும் அது எதிர்பார்க்கும் அமலுஸ் ஸாலிஹ் எனும் நல்லறங்களுடன் வாழ்ந்த அம்மனிதர் நரகம் செல்லாமல் -இறையருளால்- நேரடியாக சொர்க்கம் செல்கிறார். இதுவல்லவா உண்மையான வெற்றி! அல்லாஹ் கூறுகிறான்:
யார் நரகை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ நிச்சயமாக அவரே வெற்றி அடைந்தவராவார். (அல்குர்ஆன் 3:185)
ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உண்மையான வெற்றி!
அன்புச் சகோதர, சகோதரிகளே! நாமும் நம்முடைய வாழ்க்கையை இவ்வாறு ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?! சற்று நிதானமாக, தனிமையில் உங்கள் உள்ளத்துடன் உரையாடுங்கள்! அல்லாஹ் விரும்புவதை உங்கள் விருப்பமாகவும் அவன் வெறுப்பை உங்கள் வெறுப்பாகவும் அவனிடம் கிடைக்கும் நற்பெயரையே உங்கள் இலட்சியமாகவும் ஆக்கிக் கொள்ள நாம் ஏன் முன்வரக் கூடாது?! சிந்தியுங்கள்! சுயபரிசோதனை செய்து, செயல்படத்துவங்குங்கள்! அல்லாஹ் அப்பாதையை உங்களுக்கு நிச்சயமாக எளிதாக்குவான்!
இதோ தங்களுக்கு முன் தங்கள் ஈமான் முழுமைபெற, அதன் மூலம் இறைநேசத்தைப் பெறுவதற்கான வழிகள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இதன்படி செயல்பட கிருபை செய்வானாக!
ஈமானின் கிளைகள்
1) அல்லாஹ்வை நம்புவது.
2) இறைத்தூதர்களை நம்புவது.
3) மலக்குமார்களை நம்புவது.
4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.
5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.
6) உலக அழிவு நாளை நம்புவது.
7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.
8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.
9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.
10) அல்லாஹ்வை நேசிப்பது.
11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.
12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.
13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.
14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.
15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.
16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.
17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.
18) கல்வியைப் பரப்புவது.
19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.
20) தூய்மையாக இருப்பது.
21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.
22) ஜகாத் கொடுப்பது.
23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.
24) இஃதிகாஃப் இருப்பது.
25) ஹஜ் செய்வது.
26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.
27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.
28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.
29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் னீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.
30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.
31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)
32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.
33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.
34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.
35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.
36) கொலை செய்யாதிருப்பது.
37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.
38) திருடாதிருப்பது.
39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.
40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.
41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.
42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.
43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.
44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.
45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.
46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.
47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.
48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.
49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.
50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.
51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.
52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.
53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.
54) வெட்கப்படுவது.
55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.
56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.
57) நற்குணத்துடன் நடப்பது.
58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.
59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.
60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.
61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.
62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.
63) நோயாளியை விசாரிப்பது.
64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.
65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.
66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.
67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.
68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.
69) பிறரின் குறைகளை மறைப்பது.
70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.
71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.
72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.
73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.
74) அதிகமாக தர்மம் செய்வது.
75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.
76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.
77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.
78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.
அல்லாஹ்வை நம்புதல்
நபி(ஸல்)அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக இறங்கிய அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

இறைவன் அகில உலகுக்கும் ஒருவன் தான், இறைவன் பெற்று, பெறப்பட்டு பலவீனமுடையவனாக, சந்ததி உடையவனாக இருக்க முடியாது. இறைவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் தன்னிறைவு உடையோனாகவும், இறைவனுக்கு நிகராக யாருமே, எதுவுமே இருக்க முடியாது போன்ற கருத்துக்களை உள்ளடக்கி ஏகத்துவத்தை முழுமையாக பறைசாற்றும் விதமாக இஹ்லாஸ் என்ற அத்தியாயம் அமைந்துள்ளது.

அல்லாஹ் எங்கு இருக்கிறான்?

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். (20:5)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் (7:54)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான். இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்

ஒரு முறை நபி(ஸல்)அவர்களிடம் ஒரு அடிமைப் பெண்ணைக் கொண்டு வரப்பட்டது. அவளிடம் அல்லாஹ் எங்கே?(இருக்கிறான்) என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள் வானத்தில் என்றாள், நான் யார்? எனக் கேட்டபோது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என விடையளித்தாள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து அவளை விடுதலைச் செய்து விடுங்கள் ஏனெனில் அவள் ஈமான் கொண்டவளாக இருக்கிறாள் என்றனர். (முஸ்லிம்)

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக்(ரஹ்) தாரமி.

பெரும்பான்மையான மக்கள் இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான், காணும் இடத்திலெல்லாம் உள்ளான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்றெல்லாம் கூறுவர். இக்கருத்துகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கையில் கோளாறு செய்வதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட கொள்கையாகும். இதை ஒரு உதாரணம் மூலம் மிகச் சுலபமாக விளங்கலாம்.

ஒரு சாப்பாட்டுப் பொருள் இருக்கிறது, தூணிலும், துரும்பிலும் இருந்தால் அந்த சாப்பாட்டிலும் இருக்க வேண்டும். அதை நாம் சாப்பிட்டு விடுகிறோம் மேலும் அதைக் கழித்தும் விடுகிறோம் தூணிலும், துரும்பிலும் இறைவன் இருந்தால் அப் பொருளிலும் இறைவன் இருக்க வேண்டும் இது எவ்வளவு விபரீதமான பொருளைக் கொடுக்கிறது என்பதைச் சிந்தித்து அக்கருத்திலிருந்து விடுபடுவதோடு திருமறையும், நபி மொழியும் போதித்தபடி நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். தவறான கருத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

அல்லாஹ் அர்ஷில் இருந்தாலும் அவனுடைய கண்காணிப்பால், ஞானத்தால் அகில உலகையும் சூழ்ந்துள்ளான் என்பதையும் திருமறை மற்றும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன

அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59)

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (40:19)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை. அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.(57:4)

ஒரு முறை நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம் நாங்கள் உயரமான இடத்தில் ஏறினால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவைக் கூறுவோம். பிறகு அல்லாஹூ அக்பர் எனத் தக்பீர் கூறுவோம். அப்பொழுது எங்கள் சப்தங்கள் உயர்ந்தன. உடனே நபி(ஸல்)அவர்கள் மென்மையை கடைபிடியுங்கள் நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ அழைக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் கேட்பவனாகவும், உங்களுக்கு நெருக்கமானவனாகவும், உங்களுடனேயே இருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்: அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி).

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். 55:27

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, 89:22

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். 68:42

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

திருமறை மற்றும் நபிமொழி மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை அறிகிறோம். எனினும் திருமறை, நபிமொழியில் உள்ளதை அப்படியே நம்ப வேண்டும். மேல்மிச்சமான கற்பனைக்கோ, நம் சொந்த யூகத்திற்கோ சிறிதும் இடமளிக்கக் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் (42:11, 112:4 ஆகிய வசனங்களில்) அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுகிறான் ஆகவே நம் அறிவைப் பயன் படுத்தாமல் அப்படியே ஏற்க வேண்டும்.

அல்லாஹ்வைக் காண முடியுமா?

திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். (7:143)

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

மூன்று விஷயங்களைக் கூறுபவர் நபி(ஸல்)அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறிவிட்டார் என்று கூறிவிட்டு அதில் ஒன்றாக நபி(ஸல்)அவர்கள் மிஃராஜில் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது என்றார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம் - நூல்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை இந்த ஹதீஸின் மூலம் மிகத் தெளிவாக அறிகிறோம்.

அல்லாஹ்வை மறுமையில் காண முடியும்

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (75:22,23)

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (50:35)

50:35 வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அதிகம் என்பது அல்லாஹ்வை காண்பதையே குறிக்கும் என்று கூறினார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்பொழுது நபியவர்கள் முழு நிலவைப் பார்த்தார்கள். பிறகு கூறினார்கள் நிச்சயமாக நீங்கள் இச்சந்திரனைப் பார்ப்பதுபோல உங்கள் இரட்சகனை மறுமையில் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் எந்தத்தடையும் இருக்காது. நீங்கள் சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள (ஃபஜ்ர்) தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள (அஸர்) தொழுகையையும் பேணி வாருங்கள். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய முறைகள்

அல்லாஹ்வை மூன்று வகையில் ஏகத்துவப் படுத்த வேண்டும்

1.படைப்பில் ஏகத்துவம் (ருபூபிய்யா)

மூலமின்றி படைப்பவன்

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் 'குன்' - ஆகுக - என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்...6:101

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகளாம். (2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்) படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.(7:54)

மேலும் ஆதாரங்களுக்கு அல்குர்ஆன் 3:59, 6:73, 16:40, 37:96, 28:68, 40:68, 36:82 பார்வையிடுக.

மேற்காணும் வசனங்களில் அல்லாஹ் தன் படைப்பாற்றலை, படைக்கும் விதத்தைச் சொல்லிக் காட்டுகிறான். இதன் மூலம் நாம் அறிவது படைப்புக்குச் சொந்தக்காரன், படைக்கும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் மட்டுமே என்பதுதான். மாறாக மனிதர்களும் இவ்வுலகில் புதிது புதிதாக படைக்கிறார்களே (கண்டுபிடித்தல்) அதுவும் படைப்புதானே! என்று வினவத் தோன்றும். அல்லாஹ்வோ தான் நாடியதை, நாடிய நேரத்தில், நாடிய விதத்தில் படைக்கிறான். அல்லாஹ்வுக்கு எதையும் படைக்க மூலப் பொருள் என்று எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால் மனிதர்கள் ஒரு பொருளை படைக்க மூலப் பொருள் தேவை என்பதோடு படைக்க நீண்ட காலம் தேவை. ஒரே முறையில் தான் நாடியதை, நாடிய விதத்தில் படைக்க முடியாது. வல்ல அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது என்பதை உணரவேண்டும். ஆகவே படைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

2. வணக்கவழிபாடுகளில் ஏகத்துவம் (உளூஹிய்யா)

சகல அதிகாரங்களையும் தன்னுள் அடக்கியவன், வானங்கள் பூமியைப் படைத்தவன், ஒவ்வொரு பொருளின் ஆட்சியையும் தன் வசம் வைத்திருப்பவன் அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! (23:84)

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள்; "(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:85)

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. (23:86)

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள்; "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:87)

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. (23:88)

அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23:89)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்... (39:38)

அல்லாஹ்வை அவன் வல்லமையை மக்கா காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை மேற்காணும் வசனங்கள் சந்தேகமின்றி நிரூபிக்கின்றன. அப்படியானால் அவர்களுக்கும், நம(முஸ்லிம்களு)க்கும் என்ன வித்தியாசம்.

வணக்க வழிபாட்டில் தான் அவர்களுக்கும், ந(முஸ்லிம்களு)க்கும் வித்தியாசம் அவர்கள் தங்கள் வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செலுத்தியதோடு அதற்குக் காரணமும் சொன்னார்கள்.

அதைத் தன் திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (39:3)

வணக்கங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது, அல்லாஹ்வுக்காக செய்யப்படும் எதுவும் பிறருக்காக, பிறவற்றிற்க்காகச் செய்யக் கூடாது என்பதைக் கீழ் காணும் வசனங்கள் பறைசாற்றுகின்றன.

நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6:162)

மேலும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

பிரார்த்தனை அது தான் வணக்கம். நுஃமான் இப்னு பஷீர்(ரலி): திர்மிதி.

பிரார்த்தனையும் வணக்கம் தான், பிரார்த்தித்து நம் தேவைகளைக் கேட்பது, நம் குறைகளை போக்கவும், நோயை நீக்கவும் கோருவது அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்.

என்னை அழைப்பவருக்கு நான் பதிலளிக்கிறேன் நேர் வழி பெற என்னையே அழைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் தன் திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (2:186)

அல்லாஹ்வைத் தவிர பிறரை அழைப்பவர்களை வழிகேடர்கள் என்றும், அப்படி அழைக்கப்படுபவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான் அவர்களை மறுமை நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7:194

அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று. 7:195

"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். 7:196

அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். 7:197

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழை;ப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:5

அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். 46:6 மேலும் காண்க (22:73,35:13,14,39:38) மேற்காணும் வசனங்கள் அல்லாஹ் அல்லாதாருக்கு துளியும் அதிகாரம் இல்லை. அவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரியே! வணக்கங்களுக்கு முழுச்சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை தெளிவு படுத்துகின்றன.

3. பெயர் மற்றும் தன்மைகளில் ஏகத்துவம் (அஸ்மாவு வஸிஃபாத்)

பெயரில் ஏகத்துவம்:

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.(7:180)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன .அவற்றை
(நம்பிக்கைக் கொண்டு) மனனமிட்ட யாரும் சுவர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ் ஒற்றையானவன் , ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். அபூஹூரைரா(ரலி) புகாரி .

மேற்காணும் திருமறை வசனமும், நபிமொழியும் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுகின்றன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள் என்றும் கூறுகின்றன. அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு மனிதர்களை அழைக்கக் கூடாது.

உதாரணமாக அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்றான அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரைச் சூட்டிக்கொள்ள நாடினால், அர்ரஹ்மானுடன், அப்துன் என்பதையும் இணைத்து அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை)என்றே பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் மலிக்குல் அம்லாக் (அரசர்களின் அரசன்)என்று பெயர் சூட்டிக் கொண்டவனின் பெயர் தான் மிக மிகக் கெட்ட பெயராகும். அபூஹூரைரா(ரலி) புகாரி.

அகிலங்களின் இரட்சகனும், அதிபதியுமான வல்ல அல்லாஹ்வின் பெயருக்கு நிகராக யாரும் பெயர் சூட்டிக் கொள்ளவோ, தன்னைத் தானே அழைத்துக் கொள்ளவோ, பிறரை அழைக்கவோ கூடாது என்பதோடு அல்லாஹ் அல்லாத யாருடைய அல்லது எதனுடைய பெயருடனும் அப்துன்(அடிமை) என்பதை இணைத்து அழைக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

தன்மைகளில் ஏகத்துவம்:

அளவற்ற அருளாளன்:

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.1:2

அன்பு, கருணை எனும் பண்புகள் மனிதனிடத்திலும் இருக்கின்றன என்றாலும் அல்லாஹ்வின் அன்பு, கருணைப் போன்று விசாலமானதாக, அவன் தன்னுடைய, தன் மார்க்கத்தின் எதிரிகளுக்குக்கூட கருணை புரிந்து இவ்வுலகில் உணவளித்து வாழச் செய்வது போல் மனிதனின் கருணை இல்லை.

நித்திய ஜீவன் (என்றென்றும் நிலைத்திருப்பவன்):

அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;...2:255

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். 20:111

(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே -55:26

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.55:27

என்றென்றும் நிலைத்திருப்பவன் அல்லாஹ் மட்டும் தான், அவனுடைய படைப்புகள் அனைத்தும் மரணித்தே ஆக வேண்டும். மனிதர்களில் நல்லடியாராக இருந்தாலும் சரி, நபிமார்களாகவே இருந்தாலும் சரி அவர்கள் உயிருடன் இருப்பதாக கருதினால் அல்லாஹ்வின் நித்திய ஜிவன் என்ற தன்மையில் இணைவைத்தவர்களாக ஆவோம்.

சூழ்ந்து அறிபவன்:

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். 4:126

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். 50:16

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.58:7

அல்லாஹ் மனிதன் தன் மனதிற்குள் எண்ணுவதையும், நாம் மட்டுமே அறிவோம் என்று நினைத்து இரகசியமாக பேசிக் கொள்வதையும், எங்கிருந்தாலும் அனைத்தையும், உள்ளும், புறமும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

செவியுறுபவன், பார்ப்பவன்:

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." 4:134

அல்லாஹ்வும் பார்க்கிறான், செவியுறுகிறான், மனிதனும் செவியுறுகிறான், பார்க்கிறான் எனினும் இரண்டுக்குமிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.

மனிதனுடைய பார்வை குறிப்பிட்ட தூரம், அதுவும் திரையின்றி இருந்தால் தான் பார்க்க முடியும். குறிப்பிட்ட காட்சியை, குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பார்க்க முடியும், மனிதனுடைய செவிப்புலன் குறிப்பிட்ட தூரம், குறிப்பட்ட நபர் பேசினால், குறிப்பிட்ட சப்தத்தை, குறிப்பிட்ட நேரம் மட்டுமே செவியுற முடியும் அதுவும் மனிதன் உயிர் வாழும் வரையில் தான் என்ற அளவுகோலிலேயே உள்ளது.

அல்லாஹ்வோ உலகின் எந்த மூலையிலிருந்தாலும், எத்தனை திரைகளிடப்பட்டிருந்தாலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், இருளிலும், வெளிச்சத்திலும் பார்க்கிறான், பார்க்க முடியும். அதைப் போலவே உலகின் எந்த மூலையிலிருந்து, எத்தனை பேர், எவ்வளவு நேரம்; அழைத்தாலும் செவியுறுகிறான், என்றென்றும் செவியுறுவான்.

மறைவான ஞானம்:

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. 6:59

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். 31:34

கடந்த காலங்களில் நடந்து முடிந்தவற்றையும், நிகழ் காலங்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், எதிர் காலத்தில் நடக்கவிருப்பவற்றையும், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தையும், ஒவ்வொன்றின் விதியையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான இத்தன்மைகளில் ஏதாவது ஒன்று யாருக்காவது இருப்பதாகக் கருதினால் (அவர்கள் உயிருடன் இருந்தாலும் சரி, மரணித்தவர்களாக இருந்தாலும் சரி )அல்லாஹ்வின் கூற்றுக்கு மாறு செய்கிறோம். அல்லாஹ்வின் தன்மையை வேறு ஒருவர் பெற்றிருப்பதாகக் கருதி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாகிறோம் .

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.112:1

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.112:2

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.112:3

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.112:4

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கிப் பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். 42:11

இணைவைத்தல் பெரும் வழிகேடாகும். அதற்கு கூலி நரகம் தான் என்பதை நாம் அறிந்து அதிலிருந்து விலகுவோம்.

இணைவைத்தல்(ஷிர்க்)

ஏகத்துவத்திற்கு எதிர்மறையானது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகும். இது இருவகைப்படும்

1)பெரிய ஷிர்க் 2) சிறிய ஷிர்க்

1.பெரிய இணைவைத்தல் (ஷிர்க்) மன்னிக்கப்படாத குற்றம்

4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).31:13

பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! ஆம் அறிவியுங்கள் என்று கூறினோம்.அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்...என்று கூறினார்கள். அபூபக்ரா(ரலி) புகாரி, முஸ்லிம்.

2) செய்த நல்லறங்கள் அனைத்தும் அழிந்துவிடும்

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.(6:88)

3) சுவனம் ஹராம்

எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்.(5:72)

4) அல்லாஹ் தடுத்ததை செய்த குற்றம்

..."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (6:151)

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- புகாரி,முஸ்லிம்:அபுஹூரைரா(ரலி)

2. சிறிய இணைவைத்தல்( ஷிர்க் )

பிறர் பார்க்க வேண்டும், போற்ற வேண்டும் என்பதற்காக அமல் செய்வது (முகஸ்துதி) இதன் விளைவு

1)அமல்களுக்கு நன்மை கிடையாது.

2) மறுமையில் தண்டனை கிடைக்கும் (நிரந்தர நரகம் கிடையாது).

கியாமத் நாளில் முதல்முதலாக தீர்ப்பு வழங்கப்படுபவர் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி கேட்கப்படுவார். அதற்கவர் நான் உன் பாதையில் போர் செய்து ஷஹீதானேன். என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறுகிறாய். சிறந்த மாவீரன் என மக்களால் புகழப்பட நீ போர் புரிந்தாய் அதன் புகழை உலகிலேயே நீ பெற்றுவிட்டாய் என்று கூறி நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான் பிறகு குர்ஆனை கற்றறிந்த மார்க்க அறிஞர் விஷயத்தில் தீர்ப்புக் கூறப்படும். அவர் அழைத்துவரப்பட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவார். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். உனக்காக குர்ஆன் ஓதினேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறி விட்டாய் மக்கள் உன்னைக் காரீ (குர்ஆன் ஓதுபவர்) எனப் புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய் என்று கூறுவான். அவரை நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். பின்னர் தீர்ப்பளிக்கப்படுபவர் அல்லாஹ்வால் சிறந்த செல்வங்கள் வழங்கப்பட்ட மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படுவார். அவர் என் செல்வத்தை உன்பாதையில் செலவிட்டேன் என்று கூற அல்லாஹ் நீ பொய்யுரைத்து விட்டாய். உன்னை கொடையாளி என்று மக்கள் புகழ்வதற்காக நீ செலவு செய்தாய். அவ்வாறே உலகில் புகழ்ந்து விட்டனர். என்று கூறிவிட்டு அவரையும் நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். - முஸ்லிம்:அபூஹூரைரா(ரலி)

பகலில் பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக இரவில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான். (தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்)இரவில் சூரியன் மறைந்ததிலிருந்து உதயமாகும் வரை பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக பகலில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான்(தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்) - முஸ்லிம்: அபுமூஸா அல் அஸ்அரி(ரலி)

நாம் அறியாமல் இணைவைத்திருந்தால், வேறு பாவங்கள் செய்திருப்பின் வல்ல அல்லாஹ்விடமே தவ்பா செய்து மீட்சி பெறுவோம்.
 
 

 

No comments:

Post a Comment